பிரமதர் சொல்லியும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்: ராமதாஸ், கி. வீரமணி கோரிக்கை
சென்னை: பிரதமர் ஆணையிட்ட பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழகத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்குப் பிரதமர் ஆணை பிறப்பித்துள்ளார். அது தமிழகத்தின் தேவையில் பாதியைக்கூட பூர்த்தி செய்யாது. ஆனால் அதைக்கூட கர்நாடக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையும் நிரம்பி வரும் நிலையில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட தர முடியாது என கர்நாடகம் கூறுவது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தைப் போலவே தமிழகத்திலும் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதால் நெய்வேலி உள்பட எந்த மின் நிலையத்தில் இருந்தும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். எனவே, பிரதமர் அளிக்கும் தீர்ப்பைக் கர்நாடக அரசு ஏற்க வேண்டும். அப்படி ஏற்க மறுப்பது மத்திய அரசுக்கு மட்டுமின்றி, அரசியல் சட்டத்துக்கே விடப்பட்ட சவாலாக அமையும்.
இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
யானை பசிக்குச் சோளப் பொரி போல தமிழகத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் தர பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக அரசு அதையும் ஏற்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என்றாலும் அந்தத் தீர்ப்பை கர்நாடகம் அமல்படுத்தினால்தான் தண்ணீர் கிடைக்க சாத்தியம் உண்டு.
அதனால் கர்நாடகத்துக்குப் பிரதமர் கண்டிப்புடன் ஆணையிட வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால் மத்திய அரசு 365-வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications