வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு வாசலில் நின்று பேசி கொண்டிருந்த தேமுதிக பிரமுகரை, மர்மக்கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 8 பேரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டுபாதை பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(29). இவர் விழுப்புரம் மாவட்ட தேமுதிக மீனவரணி துணை செயலாளராகவும், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவராகவும் இருந்தார். இவரது மனைவி செழிலி(25), தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு சஞ்சய்(5) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் வீட்டின் முன் நின்று, அதேபகுதியை சேர்ந்த சுமன்(30) என்பவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு டாடா சுமோவில் வந்த ஒரு கும்பல், சவுந்தரிடம் தகராறு செய்தனர். மேலும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
இதில் பயந்து போன சவுந்தர், விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் ஓடினார். ஆனால் பின்தொடர்ந்து சென்ற கும்பல், சவுந்தரின் வலது காலை அரிவாளால் வெட்டியது. இதில் நிலைதடுமாறி சவுந்தர் கீழே விழுந்தார்.
அதன்பிறகு சவுந்தரை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிய அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியோடிவிட்டது. இதில் படுகாயமடைந்த சவுந்தர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
சவுந்தர் மீதான முன்விரோதம் காரணமாக, இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து கீழ்பெரும்பாக்கத்தை சேர்நத் சுக்கு சுரேஷ், அறிவழகன் உட்பட மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை தேடி வருகின்றனர். தேமுதிக பிரமுகர் சாலையில் ஓட ஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications