ஒரு தலை காதல்: பள்ளி மாணவியை கழுத்தை அறுத்துக் கொன்று வாலிபர் தற்கொலை
கோவை: கோவையில் காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர், தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், தக்கலை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அஜிதா(35). தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு அபிநயா(14) என்ற மகள் இருந்தார். கோவை மாவட்டம் கணபதி, கணேஷ் லே-அவுட் ஐந்தாவது வீதியில் அய்யப்பன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அபிநயா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு வழக்கு தொடர்பாக அய்யப்பனை, போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அய்யப்பனின் வீட்டின் அருகே குடியிருந்தவர் வேணுகோபால்(21). வெல்டிங் தொழிலாளியான இவர், அபிநயாவை காதலித்து வந்துள்ளார். அபிநயாவை தனிமையில் சந்தித்த வேணுகோபால் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அதை அபிநயா ஏற்கவில்லை.
அபிநயாவை காதலை ஏற்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த வேணுகோபால் குறித்து அறிந்த அஜிதா, அவரை அழைத்து கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக, அபிநயா பள்ளிக்கு செல்லவில்லை. தாய் அஜிதா வேலைக்கு சென்றுவிட்டார்.
அபிநயா வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த வேணுகோபால், அபிநயாவை சந்தித்து மீண்டும் காதலை ஏற்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு அபிநயா மறுத்ததால் ஆத்திரமடைந்த வேணுகோபால், வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் அபிநயாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
அபிநயாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். இதை கண்ட வேணுகோபால் கத்தியால் தன்னை தான் குத்தி கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட வேணுகோபால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வேணுகோபால் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications