உற்பத்தி சரிவு.. பிரேசிலில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யும் இந்தியா!

இந்தியாவில் சர்க்கரையின் விலை டன் ஒன்றுக்கு 680 டாலரை எட்டியுள்ளது. அதே நேரத்தில் பிரேசிலில் சர்க்கரை விலை 500 டாலராக உள்ளது. இதையடுத்து சில சர்க்கரை ஆலைகள் பிரேசிலில் இருந்து அதை இறக்குமதி செய்ய உள்ளன.
அடுத்த மாதம் முதல் இந்த சர்க்கரை இந்தியாவுக்கு வந்து சேரும். மொத்தம் 4,50,000 டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்படவுள்ளது.
உலகில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. ஆனால், 2009-10ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டதையடுத்து, குறிப்பாக மகாராஷ்டிரத்தில், இந்தியா அதை இறக்குமதி செய்தது. இதையடுத்து உலக அளவில் சர்க்கரை விலை 30 சதவீதம் உயர்ந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளும் இந்தியாவில் உற்பத்தி அதிகமானதால் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந் நிலையில் இப்போது உற்பத்தி சரிந்துள்ளதால் அதை இறக்குமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா மிக அதிகளவில் இறக்குமதி செய்ய உள்ளதால் உலகளவில் சர்க்கரை விலை மீண்டும் உயரும் என்று தெரிகிறது.
உலகில் மிக அதிகமான சர்க்கரையை உபயோகிக்கும் நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications