அஜீத் பவாருக்கு ஆதரவாக விலகுவோம்.. 13 மகாராஷ்டிர சுயே. எம்.எல்.ஏக்கள் மிரட்டல்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவார், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக விலகப் போவதாக 13 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளதால் மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே ஏகப்பட்ட மோதல்கள், சிக்கல்கள். இத்தனைக்கு மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறார் காங்கிரஸைச் சேர்ந்த முதல்வர் பிருத்விராஜ் சவான். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்தவரும், துணை முதல்வருமான அஜீத் பவார் நேற்று திடீரென துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து அஜீத் பவாருக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 19 அமைச்சர்களும் விலகுவதாகச் சொன்னார்கள். மேலும் ராஜினாமா கடிதங்களையும் கட்சித் தலைமையிடம் கொடுத்தனர். இதனால் நிலைமை மேலும் மோசமானது.
இருப்பினும் நிலைமை கட்டுக்குள்ளேயே இருப்பதாக மத்திய அமைச்சரான பிரபுல் படேல் கூறினார். மேலும் அஜீத் பவாருக்குப் பதில் புதிய துணை முதல்வர் நியமிக்கப்பட மாட்டார், அவரே கட்சியின் சட்டமன்றத் தலைவராகவும் தொடருவார் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், அஜீத் பவாருக்கு ஆதரவாக 13 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் களத்தில் குதித்துள்ளனர். பவாருக்கு ஆதரவாக தாங்கள் விலகத் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் அஜீத் பவார். அவரது பதவிக்காலத்தில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாகவும், பண மோசடிகள் தலைவிரித்தாடுவதாகவும், எதிர்க்கட்சிகளும், ஆர்.டி.ஐ. சேவர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து இதுகுறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக முதல்வர் சவான் அறிவித்தார். இதனால்தான் அஜீத் பவார் கோபமடைந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால் அஜீத் பவார் நாடகமாடுகிறார் என்றும், சரத் பவாருக்கே அஜீத் பவாரின் செயல் பிடிக்கவில்லை என்றும் முதல்வர் சவானுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications