கட்சி சட்டத்தை திருத்தி நிதின் கட்காரியை 2வது முறையாக தலைவராக்கும் பாஜக

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சூரஜ்கண்ட் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாஜக தலைவராக நிதின் கட்காரியை இரண்டாவது முறையாக தேர்வு செய்ய உள்ளனர். ஒரு நபர் 2 முறை கட்சி தலைவர் பொறுப்பை வகிக்கும் வகையில் பாஜக கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அக்கட்சி ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
கட்காரியின் பதவி வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதையடுத்து அவரை இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்க கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் மும்பையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படட்து. இதையடுத்து நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்தில் கட்காரி இரண்டாவது முறையாக பாஜக தலைவராவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.
இதையடுத்து கட்காரி வரும் 2015ம் ஆண்டு வரை தலைவர் பொறுப்பில் இருப்பார். தற்போதுள்ள பாஜக சட்டப்பட்டி ஒருவர் ஒரு முறை மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்காரியை மீண்டும் தலைவராக்குவதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முனைப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications