வெள்ளத்தில் மிதக்கும் அஸ்ஸாம், 18 பேர் பலி: ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர் கோகாய்
குவஹாத்தி: பாதி அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சி்ககி 18 பேர் பலியாகியுள்ளனர், 17 லட்சத்திற்கும் அதிகாமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் தருண் கோகாய் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பக்சா, பார்பேடா, தரங், தேமாஜி, திப்ருகார், கோலாகாட், ஜோர்ஹட், கம்ருப், கம்ருப் மெட்ரோ, லக்கிம்பூர், மோரிகாவ்ன், நகாவ்ன், நல்பாரி, சோனித்பூர் மற்றும் டின்சுகியா மாவட்டங்களில் உள்ள 1,916 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர், பலர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஸ்ஸாமில் உள்ள 27 மாவட்டங்களி்ல் 16 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மஜோலி தீவு தான் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டின்சுகியா நகரில் உள்ள சாதியாவில் வெள்ளப்பெருக்கால் இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களில் இருந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசப்படுகிறது. மாநிலத்தில் 3.84 லட்சம் மக்கள் 166 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்ரா, பர்ஹிதெஹிங், சுபன்சிரி, தன்சிரி மற்றும் ஜியா பராலி ஆகிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கிருந்து கொண்டே நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அவர் இன்று நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் 10 விலங்குகள் பலியாகின.












Click it and Unblock the Notifications