பெயர்: பி.ஆர்.பி என்கிற பழனிச்சாமி.. வழக்குகள் எண்ணிக்கை 13!
மதுரை: கிரானைட் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள தொழிலதிபர் பிஆர்பி என்கிற பழனிச்சாமி மீது 13வதாக ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னாள் ஆட்சித் தலைவர் சகாயம் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போதைய ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் கீழவளவு போலீசில் 6 வழக்குகளும், ஒத்தக்கடை போலீசில் 4 வழக்குகளும், மேலூர் போலீசில் ஒரு வழக்கும், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தராபுரம் அக்ரஹாரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ராணி மதுரை மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், மேலூரை அடுத்த இ.மலம்பட்டியில் நான் எனது கணவர் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வசித்து வந்தோம். எனது கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதால், எனது தந்தையின் வீட்டிற்கு வந்துவிட்டேன். இதற்கிடையில் எனது மாமியார் இறந்து விட்டார். அதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது அங்கு எனது கணவருக்கு சொந்தமான 52 சென்ட் நிலம் அபகரிக்கப்பட்டது போனது தெரியவந்தது.
அந்த இடத்தில் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் கிரானைட் கற்களால் மறைத்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, எனது கணவர் அந்த நிலத்தை அடமானம் வைத்ததாக கூறினர். மேலும், எனது கணவரைப் போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்துள்ளனர். இதைப் பற்றிக் கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பழனிச்சாமி, சுரேஷ் உள்ளிட்ட6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பழனிச்சாமி மீது போடப்படும் 13வது வழக்காகும் இது.
ஏற்கனவே பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications