ரெய்டு, ஆய்வு, அதிரடி உத்தரவுகள்... சுறுசுறுப்பு காட்டும் சென்னை கமிஷனர் ஜார்ஜ்

சென்னையில் நடந்த இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நிலைமையைத் தொடர்ந்து கமிஷனராக இருந்து வந்த ஜே.கே.திரிபாதி மாற்றப்பட்டு ஜார்ஜ் அப்பதவிக்கு கொண்டு வரப்பட்டார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் விவகாரம் ஆகியவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர் ஜார்ஜ். இதனால் பெரும் சர்ச்சைக்கும் ஆளானவர். அதேபோல பரமக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்திலும் அவரது பெயர் அடிபட்டது.
இந்த நிலையில், ஜார்ஜ் தற்போது சென்னை போலீஸ் கமிஷனராக பணியைத் தொடங்கியுள்ளார். தனது அதிரடி நடவடிக்கையால் காவல்துறையினரை கலங்கடித்து வருகிறாராம். தினசரி காவல் நிலையங்களுக்கு அவர் ரெய்டு போவதாக கூறப்படுகிறது.
ஜார்ஜ் கமிஷனராகப் பொறுப்பேற்ற மறு நாள் பாரத் பந்த் நடந்தது. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. இரண்டுமே பெரிய அளவில் பிரச்சினை இல்லாமல் நடந்து முடிந்தது.
ஆனால் ஜார்ஜால் தீர்க்க முடியாத பெரும் பிரச்சினையாக போக்குவரத்துப் பிரச்சினை மாறியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தன்றும் போக்குவரத்து பிரச்சினை மக்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது. மெட்ரோ ரயில் பணிகள் முக்கியக் காரணமாக இதற்குக் கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது தடையை மீறி நடத்தப்படும் போராட்டங்களும் கூட்ட நெரிசலை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளாராம்.
மேலும் காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளாராம். ஒருவேளை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பகுதி உதவி ஆணையரும், காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களும்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளாராம்.
ஜார்ஜ் தலைமையில் கூடங்குளம் போராட்டத்தை முறியடித்தவரான நெல்லை சரக டிஐஜி வரதாஜுலுதான் தற்போது சென்னை நகர உளவுப் பிரிவு இணை ஆணையராக மாறியுள்ளார். எனவே அவரை வைத்து உளவுப் பிரிவை ஜார்ஜ் வலுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்றத்திற்கு திடீர் விசிட்
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசிட் அடித்தார் ஜார்ஜ். அங்கு பாதுகாப்புப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வடக்கு நுழைவாயில், ஆவின் நுழைவாயில், தெற்கு நுழைவாயில், நீதிபதிகள் நுழையும் வாசல் மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் நிலைய வாயில் என ஐந்து நுழைவு வாயில்களிலும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சரியாக பணியில் உள்ளனரா என்பதை இன்று ஜார்ஜ் ஆய்வு செய்தார்.
மேலும் உயர்நீதிமன்ற வாயில்களைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு அதைக் கட்டுப்படுத்தி வரும் கட்டுப்பாட்டு அறையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கமிஷனர் ஜார்ஜின் இந்த கெடுபிடியான நடவடிக்கையால் காவல்துறையினர் சற்றே ஆடிப் போயுள்ளனராம்.












Click it and Unblock the Notifications