சென்னையில் சிலிண்டர் வெடித்த சம்பவம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
சென்னை: சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தாய் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். தந்தையும், மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 24வது தெருவை சேர்ந்தவர் கதிரேசன்(40). அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லதா(35). மகன்கள் விக்னேஷ்(11), வினோத்(7). வாடகை கட்டிடத்தின் கீழ்தளத்தில் கதிரேசன், குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டு உரிமையாளர் மாடியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டின் உரிமையாளர் தேவி, கீழ் வீட்டில் இருந்து கேஸ் கசியும் வாசனை வருவதாக, லதாவிடம் தெரிவித்துவிட்டு சென்றார். அதன்பிறகு சிறிது நேரத்தில் லதாவின் வீட்டில் இருந்து பயங்கர வெடிசத்தம் கேட்டது.
இதில் வீட்டின் சமையலறைக்குள் இருந்த லதா, வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன்மூலம் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது தெரியவந்தது.
இந்த விபத்தில் வெளியே தூக்கி வீசப்பட்ட லதாவின் உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்த கதிரேசனும், மகன்கள் விக்னேஷ் மற்றும் வினோத் ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லதா உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கதிரேசன், மகன் வினோத் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். கவலைக்கிடமாக உள்ள விக்னேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கொடுங்கையுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications