தமிழக அரசும் 3 சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல 3 சமையல் கேஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது செம்மண் எடுத்ததில் அரசுக்கு ரூ.28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திவிட்டதாக ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கிரானைட் ஒதுக்கீட்டில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன, அதிலே யார் யாருக்கு எவ்வளவு பொறுப்பு என்பதைப் பற்றியெல்லாம் முழுவதுமாக விசாரிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்சனைகள் கவனிக்கப்படுகின்றனவா? குறிப்பாக மின் தடையைப் போக்க என்ன வழி? டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு கேரள மாநிலத்தைப் பின்பற்றியாவது வாட் வரியைக் குறைக்க முடியுமா?
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 6க்கு மட்டுமே மத்திய அரசு மானியம் கொடுக்கின்ற நிலையில் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் மேலும் 3 சிலிண்டர்களுக்கு மாநில அரசே மானியம் கொடுக்க முன்வரும் என்பதைப்போல, தமிழகத்திலும் அப்படிப்பட்ட சலுகை அளிக்கலாமா, சம்பா சாகுபடிக்கு என்ன செய்வது, கூடங்குளம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்யலாம் என்பது போன்ற முக்கிய பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதா சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி அதிலே முடிவு கண்டு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications