செல்லாத பட்டா தந்ததாக புகார்: முன்னாள் மதுரை கலெக்டர் சகாயத்திற்கு 'நோட்டீஸ்'

மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் கே.கே.ரமேஷ். பொதுநல வழக்காடு மையத்தின் நிர்வாக அறங்காவலரான இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 17 பேர், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய கலெக்டர் சகாயத்திடம் மனு கொடுத்தனர். இது குறித்து கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் சகாயம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் சகாயத்தின் உத்தரவின் பேரில் கடந்த 26.1.2012 அன்று நிலையூர் பகுதியில் 17 பேருக்கு மதுரை தெற்கு தாசில்தார் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பட்டா வாங்கியவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட சென்றனர். அப்போது அதே இடத்தில் வேறு சிலர் வீடு கட்டுவது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி பிரச்சினையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தாசில்தாருக்கு மனு கொடுத்தேன். அப்போது அவர் கடந்த 26.1.2012 அன்று 17 பேருக்கு வழங்கப்பட்ட பட்டா செல்லாது என்று கூறினார். இது குறித்து மதுரை கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முயன்றேன். ஆனால் அவர், என்னை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார்.
கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஏழைகள் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி, மதுரை கலெக்டர், முன்னாள் கலெக்டர் சகாயம், மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு மனு அனுப்பினேன். ஆனால் அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மதுரை கலெக்டர், முன்னாள் கலெக்டர் சகாயம், மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை மதுரை கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அல்லது இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, துரைச்சாமி ஆகியோர், இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், மதுரை கலெக்டர், முன்னாள் கலெக்டர் சகாயம், மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications