ஜெ. தலைமையில் மின் தடை, பற்றாக்குறை குறித்து அமைச்சரவை ஆலோசனை

தமிழகத்தை மின்தடை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. தொழில்துறை முற்றிலும் முடங்கிப் போய் வி்ட்டது. சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் நினைத்த நேரத்தில் ஒரு சட்னியைக் கூட அரைக்க முடியவில்லை. மின்விசிறிகளை சரிவர பயன்படுத்த முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மின்தடையாக உள்ளது. 10 மணி நேரம், 14 மணி நேரம், 16 மணி நேரம் என்று மாநிலத்தை கூறு போட்டு குலைத்துக் கொண்டிருக்கிறது மின்தடையின் கோரம்.
மக்கள் பெரும் தவிப்புடனும், கோபத்துடனும், கொந்தளிப்புடனும் உள்ளனர். மின்தடையைப் போக்குவதை விட்டு விட்டு ஏசி போடாதீர்கள், விளக்குகளைப் போடாதீர்கள், இன்டக்ஷன் ஸ்டவ்வை பயன்படுத்தாதீர்கள் என்று மக்களுக்கு் தேவையில்லாமல் அறிவுரை கூறி மின்வாரிய அதிகாரிகளும் மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த கோபத்தின் எதிரொலிதான் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு தாக்கி சூறையாடிய சம்பவம்.
இந்த சம்பவம் தமிழக அரசை அதிர வைத்துள்ளது. இதேபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பரவி விடலாமோ என்ற அச்சமும் அரசுக்கு எழுந்துள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் முற்பகல் 11 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
இந்தக் கூட்டத்தில் மின்தடை மற்றும் மின் பற்றாக்குறை, இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது நிறைவடைய உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும், புதிய மின் உற்பத்தி திட்டங்களை துவக்குவது குறித்தும், தற்போதுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்தும் முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுதவிர அக்டோபர் 29ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபையின் 60 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் குறித்தும், அக்டோபர் 30ம் தேதி துவங்க உள்ள குளிர்காலக் கூட்டத் தொடர் பற்றியும் பேசப்பட்டதாகவும் தெரிகிறது.
அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான புகைப்படம் மட்டும் தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ளது. விவரம் குறித்து எதுவும் இதுவரை தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications