ரூ. 85 லட்சம் நிலத்தை அதிமுக பிரமுகர்கள் பறித்து விட்டதாக பெண் பரபரப்பு புகார்!
சென்னை: சென்னை அருகே தனக்குச் சொந்தமான ரூ. 85 லட்சம் மதிப்புள்ள 74 சென்ட் நிலத்தை அதிமுக பிரமுகர்கள் இருவர் பறித்துக் கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக வயதான பெண் ஒருவர் பரபரப்புப் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் பெருமளவில் நிலப்பறிப்புகள் நில மோசடிகள் நடந்ததாக குற்றம் சாட்டிய முதல்வர் ஜெயலலிதா அந்த நிலங்களை மீட்க அதிரடி நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டார். அதையடுத்து பல நூறு திமுகவினர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் முதல் சாதாரண ஒன்றியச் செயலாளர் வரை பலரையும் கைது செய்தது காவல்துறை.
இந்த நிலையில் தற்போது அதிமுக பிரமுகர்கள் இருவர் மீது வயதான பெண் ஒருவர் நிலப்பறிப்புப் புகாரை கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்து உரிய ஆதாரங்களுடன் இந்தப் புகாரை அவர் முன்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவரது பெயர் ராஜலட்சுமி. சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,
எனக்கு சொந்தமான 74 செண்ட் நிலம் ரூ.85 லட்சம் மதிப்புடையது. ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மணப்பாக்கம் கிராமத்தில் உள்ளது அந்த நிலம். இந்த நிலம் 1987ல் வாங்கியது.
தற்போது அந்த இடத்தில் நான் வீடு கட்ட முடிவு எடுத்தபோது காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் காமராஜ் மற்றும் 157வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் ஆகிய இருவரும் எனது நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுகிறார்கள்.
இதுபற்றி கேட்டால் காமராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொய் வழக்குப் போட்டு என்னை மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக காவல் ஆணையாளர் அலுவலகத்திலும், மனித உரிமை ஆணைத்திடமும் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
நான் உயிரோடு இருக்கும்போதே எனது நிலத்தை மீட்டு எனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட போராடி வருகிறேன். எனக்கு நீதி வேண்டும். என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறிய அவர் கதறி அழுதது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தில் நேரடியாகவே தலையிட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கி இந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications