கொடுத்த கடனை திருப்பி கேட்டு தகராறு: புழல் சிறையில் கைதியின் கழுத்து அறுப்பு
சென்னை: புழல் சிறையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில், ஆயுள் தண்டனை கைதி ஒருவரை, 2 கைதிகள் சேர்ந்து பிளேடால் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆயுள் தண்டனை கைதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையை அடுத்த எண்ணூரைச் சேர்ந்தவர் கார்மேகம்(35). இவர் கடந்த 2009ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் விசாரணை கைதியாக இருந்த கார்மேகம், அதே சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி வெல்டிங் குமாரை கொலை செய்தார்.
இந்த நிலையில் வழிப்பறி வழக்கில் சிக்கிய சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீதர்(25) என்பவரும் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு, கார்மேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் பேரில் சிறை கைதிகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்த ஸ்ரீதரிடம், கார்மேகம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எண்ணூர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கார்மேகம், விசாரணை சிறையில் இருந்து மாற்றப்பட்டார். இதனால் ஸ்ரீதருக்கு, கார்மேகத்தை சந்திக்க முடியாமல் போனது. மேலும் கடந்த 2010ம் ஆண்டு சிறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கார்மேகம், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் வெல்டிங் குமார் கொலை வழக்கு தொடர்பாக திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்துவதற்காக மதுரை சிறையில் இருந்து கார்மேகம் அழைத்து வரப்பட்டு, சென்னை புழல் சிறையின் தண்டனை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் நேற்று காலையில் தண்டனை கைதிகள் சிறைகளின் கதவுகள் திறக்கப்பட்ட போது கார்மேகம், நேற்று மற்ற கைதிகளுடன் வெளியே வந்தார். அப்போது கார்மேகத்தை கண்ட ஸ்ரீதர், ரூ.10 ஆயிரம் கடனை, வட்டியுடன் சேர்த்து ரூ.15 ஆயிரமாக தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தனது சக கைதியான ஆலப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்(41) உடன் சேர்ந்து ஆக்சாபிளேட் மூலம் கார்மேகத்தின் கழுத்தை அறுத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சிறை காவலர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்த கார்மேகத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புழல் சிறை ஜெயிலர் அன்பழகன் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications