ஈவ் டீசிங் கொடுமையால் பிபிஏ பட்டதாரி தீக்குளித்து சாவு: 6 பேருக்கு வலை
நாகை: மயிலாடுதுறையில் பயிற்சி மையத்தில் 6 வாலிபர்கள் ஈவ் டீசிங் செய்ததால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பூக்கடை பகுதி கொண்டாரெட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி(24). பி.பி.ஏ. பட்டதாரி. அவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத விரும்பினார். இதையடுத்து மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார் கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். அப்போது அதே மையத்திற்கு வந்த ஒரு வாலிபருக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர்கள் செந்தில்குமார், காளிதாஸ், சிவரஞ்சனியின் எதிர்வீட்டைச் சேர்ந்த சபரி, சண்முகம் மற்றும் 2 பேர், சேர்ந்து கொண்டு அந்த பையனுடன் மட்டும் தான் பேசுவாயா, எங்களுடன் எல்லாம் பேசமாட்டாயா என்று கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அவர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் இனி வீட்டில் இருந்தே படி என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கடந்த 10 நாட்களாக வீட்டில் இருந்து தான் படித்து வந்துள்ளார்.
அப்படியும் அந்த வாலிபர்கள் அவரை விடுவதாக இல்லை. எதிர்வீட்டில் இருந்த சபரியும், சண்முகமும் நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனியின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு அவரை ஈவ் டீசிங் செய்துள்ளனர். கிண்டல் செய்ததுடன், அசிங்கமாக பேசியுள்ளனர். இதைக் கேட்டு மனமுடைந்த அவர் பாத்ரூமுக்கு சென்று தனது உடலில் மணணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இறப்பதற்கு முன்பு அவர் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்1 நீதிபதியிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார். வாலிபர்கள் தன்னை ஈவ் டீசிங் செய்ததால் தான் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த அவர் தனது மரணத்திற்கு காரணமானவர்களின் பெயரைக் கூறவில்லை.
ஆனால் அவரது தந்தை அந்த 6 பேரின் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications