பின்லேடனுக்கு சிறு வயதிலேயே ஒரு கண் பார்வை போய் விட்டதாம்!

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கக் கடற்படை கமாண்டோ வீரர்கள் அதிரடியாக சுட்டுக் கொன்று பிணத்தை மீட்டு கடலில் போட்டு விட்டனர்.
இந்த நிலையில் Days With The Imam என்ற பெயரில் ஒரு வீடியோ உரையை ஜவாஹிரி வெளியிட்டுள்ளார். அது, அல் கொய்தா ஆதரவு இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரம் ஓடும் இந்த வீடியோவில் பின்லேடனுக்கும் தனக்குமான நட்பு, உறவு குறித்து விளக்கியுள்ளார் ஜவாஹிரி.
அதில் ஜவாஹிரி கூறுகையில், பலருக்கு பின்லேடனின் வலது கண் பார்வைத் திறனை இழந்திருந்தது தெரியாது. சிறு வயதில் அவர் ஒரு விபத்தில் சிக்கியபோது அந்த கண்ணில் பார்வை பறிபோனது. ஒரு கண்ணுடன்தான் அவர் கடைசி வரை செயல்பட்டு வந்தார். இந்த விஷயம் மிக மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.
ஒரு காலத்தில் அவர் சவூதி அரேபியக் கிளையின் முஸ்லீம் பிரதர்ஹுட் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் யூனியனுக்கு எதிராக புனிதப் போர் தொடுக்க வேண்டும் என்று கூறியதால் அவர் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
நானும், பின்லேடனும் கொள்கை அளவில் இணை பிரியாதவர்களாக இருந்தோம். எங்களுக்கு மரணம் பிடிக்கும். அதேபோல மற்றவர்களின் வாழ்க்கையையும் நாங்கள் மதிக்கிறோம்.
எங்களுக்கு முடிவே இல்லாத வன்முறையில் நம்பிக்கை இல்லை. நாங்களும் சரி மற்றவர்களும் சரி அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறோம்.
நானும் சரி எனது சகோதரர் பின்லேடனும் சரி காட்டுமிராண்டித்தனமானவர்கள், தீவிரவாதிகள், ரத்ததாகம் எடுத்தவர்கள் என்று கூறப்படுவதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜவாஹிரி.
இந்த வீடியோ ரம்ஜான் நோண்புக் காலம் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு மே 2ம் தேதி பின்லேனை அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். இருப்பினும் இதுவரை பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த புகைப்படத்தையோ, வீடியோவையோ அவர்கள் வெளியிடவில்லை. பின்லேடனுக்குப் பிறகு ஜவாஹிரி அல் கொய்தா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications