மூன்றில் ஒரு பங்கு 'கரண்ட்' சென்னைக்கு... இதர பகுதிகளுக்கு கரண்ட்டுக்கு 'ரெஸ்ட்'!
சென்னை: தமிழகம் முழுவதும் கடும் மின்சாரத் தட்டுப்பாடும், தடையும் அகோரமாக தலைவிரித்தாடி வரும் நிலையில் சென்னைக்கு மட்டும் தங்கு தடையின்றி மின்விநியோகத்தை உறுதி செய்வதில் மாநில அரசும், மின்வாரியமும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனவாம். மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கை சென்னைக்குத் திருப்பி விடுகின்றனராம்.

ஏன் சென்னைக்கு மட்டும்...
சென்னைக்கு மட்டும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கான காரணங்களையும் அடுக்குகின்றனர்.

ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம்
தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி சராசரி மின் உற்பத்தியானது 7500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது சில சமயம் கூடலாம், குறையலாம்.

சென்னைக்கு 2500 மெகாவாட்
தமிழக மின் உற்பத்தி எப்படிப்பட்டதாக இருந்தாலும், தினசரி 2500 மெகாவாட் மின்சாரத்தை எடுத்து தனியாக வைத்து விடுகின்றனராம் - தலைநகர் சென்னைக்காக.

சென்னைக்கு 1 - மற்ற பகுதிகளுக்கு 14
சென்னையில் ஒரு மணி நேரம் மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக மின்சாரம் தடைப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் இதர பகுதிகளில் குறைந்தது 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது.

முன்பும் இப்படித்தான்
கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது கூட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டபோது சென்னை மட்டும் விட்டு வைக்கப்பட்டது. இதற்கு மற்ற பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பவே, 1 மணி நேர மின்தடையை அமல்படுத்தினர். பின்னர் இதை 2 மணி நேரமாக உயர்த்தினர்.

காலையில் ஒரு கரண்ட் - மாலையில் ஒரு கரண்ட்
காற்றாலைகள் மூலம் காலையில் வெறும் 130 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறதாம். மாலையில் 2000 மெகாவாட் மின்சாரம் வரை கிடைக்கிறது.

சென்னைக்கு மட்டும் தனிப்பாசம் ஏன்
சரி சென்னைக்கு மட்டும் ஏன் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுகிறது என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள். அவர்கள் சொல்வதும் ஏற்கக்கூடியதாகவே உள்ளது.

தொழில் நிறுவனங்கள் நிறைய இருக்கே...
சென்னை இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்று. தலைமைச் செயலகம், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை சென்னையில் உள்ளன. பல நாட்டுத் தூதரகங்கள் உள்ளன. பெரும் பெரும் உலகப் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் கரண்ட்டை கட் செய்ய முடியாது என்கிறார்கள்.

கரண்ட் இல்லாவிட்டால் ஓடிருவாங்க
பன்னாட்டு நிறுவனங்களை இங்கு வரவழைக்க அரசு பெரும் முயற்சிகளை எடுத்து அழைத்து வந்துள்ளது. இவர்களுக்கு நாம் நிச்சயம் தொடர்ந்து மின்சாரம் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் வேறு இடங்களுக்குப் போய் விடும் அபாயம் உள்ளது.

ஐடி நிறுவனங்களையும் கவனித்தாக வேண்டுமே
அதேபோல சென்னையில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெருகியுள்ளன. இவர்களுக்கும் மின்சாரம் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் இடத்தைக் காலி செய்து விடுவார்கள் என்கிறார்கள்.

பொருளாதார பாதிப்பும் வரும்
இப்படிப் பல்வேறு முக்கிய காரணங்களால் சென்னைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் தந்தாக வேண்டிய நிலை உள்ளது. இதில் நாம் தவறி விட்டால், சென்னைக்கு வருவதற்கு எதிர்காலத்தில் தொழில்நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்படும், இதனால் அரசுக்குப் பொருளாதார ரீதியில் பல பாதிப்புகள் ஏற்படும், சென்னைக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
எனவே சென்னை வேறு, தமிழகம் வேறு
பல்வேறு முக்கியக் காரணங்களைக் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தின் இதர பகுதிகளைப் போல சென்னையிலும் பல மணி நேரம் மின்தடையை அமல்படுத்துவது என்பது கண்டிப்பாக இயலாத காரியம் என்று மி்ன்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications