சட்டசபை வைர விழா கூட்டத்தை ஸ்தம்பிக்க வைக்க சென்னையில் முற்றுகை... கூடங்குளம் குழு அறிவிப்பு!

இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது நெடுமாறன் பேசுகையில்,
இப் போராட்டம் தமிழக மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம். இதுபற்றி இன்னமும் பலருக்கு தெரியவில்லை. எனவே, அணு உலைக்கெதிரான போராட்டத்தை தமிழக மக்களின் கோரிக்கைப் போராட்டமாக மாற்ற வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையின் வைர விழா அக்டோபர் 29-ம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் அணு உலையை மூடவலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும். இதில், அணு உலைக்கெதிரான அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோரைத் திரட்டி சென்னையை ஸ்தம்பிக்க வைக்க போராட்டக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களையும் போராட்டத்திற்கு அழைக்கின்றனர். அவர்களுடன் பொதுமக்களையும் திரட்டி போராட்டத்தை பெரிதாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications