தமீம் அன்சாரி தீவிரவாதி அல்ல, இலங்கைக்கு காய்கறி வியாபாரம்தான் செய்தார் - தமுமுக
சென்னை: தீவிரவாதி என்று போலீஸாரால் பிடிக்கப்பட்டுள்ள தமீம் அன்சாரி ஒரு புகைப்படக் கலைஞர். இலங்கைக்குக் காய்கறி வியாபாரம்தான் செய்து வந்தார். அவர் தீவிரவாதியோ அல்லது அன்னிய கைக்கூலியோ அல்ல என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமுமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
26.09.2012 அன்று தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர், குஜராத், டெல்லி, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை க்யூ பிராஞ்ச் போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால், இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும், விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமீம் அன்சாரியை திருச்சியில் வைத்துப் பிடித்த போலீஸார் அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்திய ராணுவ ரகசியங்களை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.