காவிரி: உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறது கர்நாடகம்

காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய தலைவர் பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
காவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிய கர்நாடக அரசுக்கு இந்த உத்தரவு பெரும் அடியாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று கூட்டினார். இக்கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடையாணை பெறுவோம். மேல்முறையீடு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்றார்.
மேட்டூரில் நீர் மட்டம் குறைந்தது.. வெளியே தெரியும் கோபுரங்கள்:
இந் நிலையில் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வராததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதையடுத்து, நீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலய இரட்டைக் கோபுரங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, நீர் தேக்கும் பகுதிகளில் இருந்த கிராம மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது அவர்கள் தங்களது வழிபாட்டுத் தலங்களை இடிக்காமல் அப்படியே விட்டுச் சென்றனர்.பண்ணவாடியில் இரட்டைக் கோபுர கிறிஸ்தவ ஆலயமும், ஜலகண்டேஸ்வரர் கோயிலும், சாம்பள்ளியில் மீனாட்சியம்மன் கோயிலும், சோழவான்டி வீரபத்திரன் கோயிலும் இடிக்காமல் விடப்பட்டன.
மேட்டூர் அணை நிரம்பும் போது இந்தக் கோயில்கள் நீரில் மூழ்கிவிடும். அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழே குறையும் போது கோயில்கள் வெளியே தெரியத் தொடங்கும். தற்போது சம்பா நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் கர்நாடகத்தில் இருந்து போதிய நீர் வராததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 76.37 அடியாக குறைந்ததால் கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டைக் கோபுரங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன












Click it and Unblock the Notifications