ஐ.நா.சபையில் டெசோ தீர்மானம்: 6ம் தேதி நியூயார்க் செல்கிறார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ மாநாடு கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இதில் இலங்கை தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் அளிக்க திமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் டெசோ அமைப்பின் கூட்டம் வரும் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுக பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையம், இலங்கை போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்விற்கு பொறுப்பேற்றுள்ள இந்தியா, இதில் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வரும் 3ம் தேதி நடைபெற உள்ள டெசோ அமைப்பின் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆகியோர் வரும் 6ம் தேதி நியூயார்க் செல்கின்றனர். அங்கு ஐ.நா.சபையின் பொது செயலாளர் பான் கி மூனிடம், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அளிக்க உள்ளனர். மேலும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் கழகத்தின் உயர் கமிஷனரை, டெசோ அமைப்பினர் சந்தித்துப் பேச உள்ளனர்.












Click it and Unblock the Notifications