துரைதயாநிதி தலைமறைவு: மு.க.அழகிரி உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் பிஆர்பி கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, இதில் ஒலிம்பஸ் நிறுவனப் பங்குதாரர்கள் மற்றும் அதன் காசாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், துரை தயாநிதி தலைமறைவாகிவிட்டார். அவரது முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து துரையை கைது செய்ய மதுரை எஸ்பி பாலகிருஷ்ணன் 10 தனிப்படைகள் அமைத்துள்ளார்.
துரை வெளிநாடுகளுக்குத் தப்பி விடாமலிருக்க விமான நிலையங்களுக்கும் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந் நிலையில் துரை தயாநிதியின் இருப்பிடம் குறித்து அறிய அழகிரியின் மகளின் கணவரின் சகோதரர் தீபக், அவரது தந்தை ரத்தினவேல் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முன்னதாக மதுரை நாகமலைப் புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் உள்பட பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கும் துரை இல்லாததால் அண்ணாநகர், வில்லாபுரம், கரிமேடு உள்பட பல இடங்களில் வசித்து வரும் முக்கிய திமுக பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் துரை தயாநிதி சிக்கவில்லை.
கொடைக்கானலில் உள்ள அழகிரியின் பங்களாவில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு சென்றது. ஆனால், அவர் அங்கும் இல்லை.
இது குறித்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறுகையில், துரைதயாநிதி இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. துரை தயாநிதியின் நண்பர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டில் துரை தயாநிதி இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்தால் அவரது வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தி விசாரிக்கப்படும் என்றார்.
முதலில் திமுகவினர், அடுத்ததாக உறவினர்கள் என்று போலீசார் தங்களது விசாரணை வளையத்தை நெருக்கி வருகின்றனர். துரையின் தங்கையின் கணவர் குடும்பத்துக்கே பிரச்சனை தரப்படுவதால் துரை விரைவில் தானே சரண்டராவார் என்று போலீசார் கருதுகின்றனர்.
பிஆர்பி மகன்களும் 'எஸ்':
இந் நிலையில் கிரானைட் முதலை பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் உள்பட தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க மற்றொரு தனிப்படை பெங்களூருக்கு விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications