''வரும்.. ஆனா வராது..'' பெங்களூருக்கு வருவதும் ஒசூரில் நிறுத்தப்படுவதுமாக தமிழக அரசு பஸ்கள்!

நேற்று முன்தினம் காலையில் பெங்களூர் வரை இயக்கப்பட்ட தமிழக பேருந்துகள், மாலையில் ஒசூருடன் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல மேட்டூர் வழியாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை, கொள்ளெகால் வழியாக பெங்களூர், மைசூருக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் நேற்று இரண்டாவது நாளாக இயக்கப்படவில்லை.
தமிழகம்-கர்நாடகம் இடையே மூன்று முக்கியத் தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
1. தமிழகத்தில் இருந்து ஒசூர் வழியாக பெங்களூர் செல்பவை.
2. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பண்ணாரி, மாதேஸ்வரன் மலை, கொள்ளெகால் வழியாக பெங்களூர், மைசூர் செல்பவை.
3. நீலகிரியில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்பவை.
இந்த மூன்று வழித்தடங்களில் பண்ணாரி, மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம், கொள்ளெகால், திம்பம், ஆசனூர் (வீரப்பன் ஆட்டம் போட்ட ஏரியாக்கள்) வழியாக செல்லும் பஸ்கள் கர்நாடகத்தில் மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.
கர்நாடகத்தில் காவிரி விவகாரம் மிகப் பெரிதாக வெடித்துள்ளது இந்த மாவட்டங்களில் தான் என்பதால் இந்த பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டன.
மேட்டூர் இருந்து மட்டும் கொளத்தூர், கோவிந்தபாடி, பாலாறு, பண்ணாரி, மாதேஸ்வரன் மலை, கொள்ளெகால் வழியாக மைசூருக்கு தினமும் தமிழக அரசு 15 பஸ்களை இயக்குகிறது. ஆனால்,
பாதுகாப்பு காரணம் கருதி நேற்று அதிகாலை 5 மணி முதல் இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. சத்தியமங்கலம் பஸ் நிலையத்திலேயே அவை நிறுத்தப்பட்டன.
தனியார் பஸ்கள் மட்டும் கர்நாடக மாநிலத்துக்கு சென்று வந்தன. இதேபோல் ஈரோடு மாவட்டம் தாளவாடி செல்லும் பஸ்கள் கர்நாடக எல்லையான புளிஞ்சூர் வழியாக செல்லாமல் தலமலை வழியாக இயக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக ஒரு சில தனியார் பஸ்களே இயக்கப்பட்டதால் கர்நாடக மாநிலம் செல்லவேண்டிய பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர்.
அதே நேரத்தில் சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, கோவை, சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் சிறிது நேரம் இயக்கப்படுவதும், பின்னர் ஒசூரிலேயே நிறுத்தப்படுவதுமாக பெரும் களேபரம் நடந்தது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
அதே நேரத்தில் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு தினமும் சென்று வரும் கர்நாடக அரசு பஸ்கள் நேற்று வழக்கம் போல சென்று வந்தன. இதனால் பெங்களூர் பயணிகள் அனைவரும் கர்நாடக அரசு பஸ்களில் ஏறி சென்றனர். அதே போல தனியார் பஸ்களும் வழக்கம் போல் இயங்கின.
அதே போல தமிழகத்தைச் சேர்ந்த லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களும் நேற்று 2வது நாளாக இயக்கப்படவில்லை. இன்று தான் அவை கர்நாடகத்தை எட்டிப் பார்த்தன.
கடைசி நேரத் தகவலின்படி நேற்று மாலை முதல் தமிழக பஸ்கள் பெங்களூருக்குள் வந்து போய்க் கொண்டுள்ளன.
ரயில் மறியல்:
இதற்கிடையே மைசூர்-மாண்டியா மாவட்ட விவசாயிகள் இன்று பெங்களூர் நகருக்கு திரண்டு வந்து ரயில் மறியிலில் ஈடுபட்டனர்.
பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த மைசூர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக பெங்களூர் - மைசூர் இடையே பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. போராட்டக்காரர்களை போலீசார் வந்து அப்புறப்படுத்தினர்.
அதே போல மாண்டியா மாவட்டம் கெஜலகரே என்ற கிராமத்தில் விவசாயிகள் தண்டவாளத்தில் நின்று மைசூர்-சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.
மைசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மைசூரில் கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்பினர் துணை கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6ம் தேதி பந்த் உறுதி:
இந் நிலையில் வரும் 6ம் தேதி கர்நாடகத்தில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால், 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை முதலே தமிழக பஸ்கள், வாகனங்கள் கர்நாடகத்துக்குள் நுழையாது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications