காவிரி பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் இன்று கர்நாடகா மறு சீராய்வு மனு தாக்கல்

காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்து விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காவிரி ஆணைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்த நிலையில் காவிரி ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், காவிரி ஆணைய தலைவரின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பிரதமரின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி கர்நாடக அரசு சார்பில் அவசர மனு அனுப்பப்பட்டது. இதன் மீது மத்திய அரசு உடனே முடிவு எடுக்காததை அடுத்து கடந்த 29ம் தேதி நள்ளிரவு முதல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்தற்கு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பெங்களூர், மண்டியா பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட கோரி இன்று கர்நாடக அரசு தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள காந்தி பவனில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது,
உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு மதிப்பு அளித்து, காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு 9,000 கனஅடி காவிரி நீரை திறந்துவிட்டு உள்ளோம். காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டி சட்ட போராட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிடக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். கர்நாடகத்தின் உண்மை நிலையை எடுத்து கூறி நீதிமன்றத்தில் நியாயம் கேட்போம். காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும். காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கெளடாவுடன் பொம்மை சந்திப்பு
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை, நீர்ப்பாசன அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று சந்தித்து பேசினார்.
அதன்பிறகு அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது,
முன்னாள் பிரதமர் தேவேகவுடா அனுபவம் கொண்டவர். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வழக்கு விவரங்கள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினேன். இந்த பிரச்சனையில் அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை அவரிடம் விவரித்தேன்.
அடுத்தபடியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரிடம் கருத்து கேட்டேன். அவர் சில கருத்துகளை கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
கர்நாடக தலைவர்கள் எதிர்ப்பு
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட சம்பவத்திற்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எதியூரப்பா, காவிரி பிரச்சனைக்காக, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆட்சி இழக்க வேண்டிய நிலை வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
காவிரி பிரச்னையில் ம.ஜ.த.வினர் அரசியல் ஆதாயம் தேட பார்க்கின்றனர். அக்கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏகளும், எம்.பி.யும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். காவிரி பிரச்னையில் அவர்களுக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் எங்களுக்கும் உள்ளது. எங்கள் கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். இந்த பிரச்சனையில் ஆட்சி இழக்கும் நிலை வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தயாராக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications