குஜராத்தில் டிசம்பர் 13, 17ல் இரு கட்டமாக சட்டமன்றத் தேர்தல், இமாச்சலில் நவ-4ல் தேர்தல்

இது தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று வெளியிட்டார்.
இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாகவும், குஜராத்தில் டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்கும். இரு மாநில வாக்குகளும் டிசம்பர் 20ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் வெளியிடப்படும்.
குஜராத்தில் கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றார் பாஜக முதல்வர் நரேந்திர மோடி. அவர் இம்முறையும் வென்று ஹாட்ரிக் அடிப்பார் என பாஜக நம்புகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் வலுவிழந்த நிலையிலேயே உள்ளது.
பாஜகவிலிருந்து பிரிந்து வந்த கேசுபாய் படேல் துவக்கியுள்ள தனிக் கட்சி பாஜகவின் ஓட்டுக்களைப் பிரித்து தங்களை ஓரளவுக்கு காப்பாற்றும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
குஜராத் சட்டமன்றத்தில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன. இதில் பாஜக கடந்த தேர்தலில் 117 இடங்களிலும் காங்கிரஸ் 59 இடங்களிலும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் 3.78 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம்...
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2007ம் தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோற்றது.
68 இடங்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் பாஜக கடந்த தேர்தலில் 41 இடங்களிலும், காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றன.
இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கியுள்ளது காங்கிரஸ்.
இந்த மாநிலத்தில் 45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
முதல்வர் பிரேம் குமார் துமால் தலைமையில் பாஜகவும் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையில் காங்கிரசும் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டன.
குஜராத்தில் இன்று தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிரச்சாரத்தைத் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications