காவிரியில் தண்ணீர் திறப்பை கண்டித்து கர்நாடக மடாதிபதிகள் ஆர்ப்பாட்டம்
மண்டியா: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவில் உள்ள மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், விவசாயிகள் என்று பலத்தரப்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்து விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்தது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், காவிரி ஆணைய தலைவரின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஆனால் இதற்கு கர்நாடகாவின் மைசூர், மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். அதிலும் காவிரி நீர்ப்பாசன மண்டலமாக விளங்கும் மண்டியாவில் இந்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள், கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர், அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக கர்நாடகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மடாதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காவிரி நல பாதுகாப்பு குழு சார்பில் மண்டியாவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி பாலகங்காதரநாத சுவாமி கலந்து கொண்டார். அவருடன் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் கீழ் இயங்கும் 20 கிளை மடங்களின் மடாதிபதிகளும் பங்கேற்றனர்.
இது குறித்து மடாதிபதி பாலகங்காதரநாத சுவாமி கூறியதாவது,
காவிரி தண்ணீர் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்ய நாங்கள் தயாராக உள்ளேன். இந்த பிரச்சனையில் பிரதமர், நீதிக்கு புறம்பான முடிவை அறிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
மண்டியாவில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னட திரைப்பட நடிகர் அம்ரீஷ் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அப்போது காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications