வெள்ளகோவிலில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் வெட்டி கொலை-மர்ம நபர்களுக்கு வலை
திருப்பூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மாமியார் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெள்ளக்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள காடையுரான்வலசு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(70). இவர் வெள்ளகோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தாமணி(50). இவர்களுடன் சாந்தாமணியின் தாய் ராமாத்தாள்(77) உட்பட 3 பேரும் காடையுரான்வலசில் உள்ள செங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் தோட்ட வேலை செய்யும் வீராச்சாமி நேற்று அதிகாலை பெரியசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பெரியசாமியின் வீடு திறந்த கிடந்தது. வீட்டிற்குள் சாந்தமணியும், வெளியில் அவரது தாய் ராமாத்தாளும் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். மேலும் வீட்டின் அருகே உள்ள கிணற்றின் பக்கத்தில் பெரியசாமியும் உடலின் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீராச்சாமி, இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் எஸ்.பி. அமித்குமார் சிங், டி.எஸ்.பி. ஆர்.ராஜாராம், வெள்ளக்கோவில் இன்ஸ்பெக்டர் பி.பழனிசாமி ஆகியோர் விசாரித்தனர். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் கடந்த 1ம் தேதி இரவு 3 பேரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பெரியசாமியின் மனைவி சாந்தாமணி, ராமாத்தாள் ஆகியோரின் இரு கண்களும் கத்தியால் குத்தி தோண்டப்பட்டது போன்று காணப்பட்டது. மேலும் 3 பேரையும் துரத்தி சென்று கொடூர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் சாந்தாமணி அணிந்திருந்த தங்கதாலியை மட்டுமே மர்மமனிதர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். மற்றபடி வீட்டில் இருந்த பணம், நகை ஆகியவை அப்படியே உள்ளது.
நள்ளிரவில் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த பிறகு மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து ரத்த கறைகளை கழுவிவிட்டு சென்றுள்ளனர்.
வீட்டிற்கு இருந்த பணம், நகை ஆகியவை கொள்ளையடிக்கப்படாத நிலையில், மர்மநபர்கள் 3 பேரை கொலை செய்ய காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக 3 பேரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications