திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த போலீஸ் தடையா...?
சென்னை: சென்னையில் அக்டோபர் 5ம் தேதி திமுக நடத்தத் திட்டமிட்டுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு, திமுக கேட்ட பகுதியில் அனுமதி தர போலீஸார் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் போராடடம் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குழப்பமாகியுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவோம் என்று திமுக தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து அக்டோபர் 5ம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவு இணை கமிஷனர் வரதராஜு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அன்பழகன் பேசுகையில், சென்னையில் வருகிற 5-ந்தேதி மாலை 3 மணி முதல் 5 மணிவரை தி.மு.க. சார்பில் கறுப்பு உடை அணிந்து மனிதசங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு போலீசில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து, தலைமைச்செயலகம் வழியாக, கலங்கரை விளக்கம்வரை இந்த போராட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பத்தில் கூறி இருந்தோம். வழியில் தலைமைச்செயலகம் இருப்பதால், இந்த வழியில் மனித சங்கிலி நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று போலீசார் கூறி விட்டனர்.
கழகத்தலைவர் கலைஞரின் அறிவுரையின்படி, வேறு 2 வழிகளில் ஒன்றிற்கு அனுமதி கேட்டுள்ளோம். கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து, சென்டிரல் வழியாக, அறிவாலயம் வரை ஒரு வழியிலும், கலங்கரை விளக்கம் அருகில் இருந்து சாந்தோம், சத்யா ஸ்டூடியோ வழியாக, காந்தி மண்டபம் வரை மற்றொரு வழிக்கும் அனுமதி கேட்டுள்ளோம்.
அமைதியாக, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் இந்த போராட்டம் நடக்கும். டெசோ மாநாடு நடந்தபோது பிரச்சினை ஏற்படுத்தியது போல இல்லாமல், இப்போது போலீசார் அனுமதி வழங்குவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் கண்டிப்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தே தீரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications