மைசூர் பரசுக்கி அருவியில் குளிக்க சென்ற பெங்களூர் என்ஜினியர் பலி
மைசூர்: மைசூரில் உள்ள பரசுக்கி அருவியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பெங்களூர் ஐடி என்ஜினியர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
மும்பையை சேர்ந்தவர் ராஜகுமார் கேஜஸ்வர்(23). பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி விடுமுறையை கழிக்க, தனது நண்பர்கள் 10 பேருடன் மைசூர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்காவில் உள்ள பரசுக்கி அருவிக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு நண்பர்களுடன் சேர்ந்து அருவியில் இருந்து ஓடி வரும் நீரில் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் ராஜகுமார் இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட அவரது நண்பர்கள் செய்வதறியாமல் அலறினர்.
இதன்பிறகு அங்கிருந்தவர்களின் உதவியுடன் நீரில் அடித்து செல்லப்பட்ட ராஜகுமாரை மீட்க முயன்றனர். ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவரை மீட்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளேகால் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளை துவக்கினர். ஆனால் இதுவரை ராஜகுமாரின் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே அருவியில் குளிக்க வந்த கல்லூரி மாணவர் ஒரு நீரில் மூழ்கி பலியானார். இந்த ஆண்டு மட்டும் இங்கு குளிக்க வந்தவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications