சாலைகளில் சுற்றித்திரியும் ஈமு கோழிகள்: அதிர்ச்சியில் மக்கள்

லட்சக்கணக்கில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் பணம் ஈட்டலாம் என்பது ஈமு பண்ணை நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதி.
இதை நம்பி ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய்களை முதலீடு செய்தனர் விவசாயிகள். ஈமுகோழிகளை வளர்க்க கொடுத்த நிறுவன உரிமையாளர்கள் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர். சுசி தொடங்கி குயின், அல்மா என மோசடி ஈமு நிறுவனங்களின் பட்டியல்கள் நீள்கின்றன.
ஒருநாள் செலவு 2.5 லட்சம் ரூபாய்
கோழிகளை வாங்கிய விவசாயிகளோ அவற்றிர்க்கு சரியான தீவனம் போட்டு பராமரிக்க முடியாமல் தடுமாறிவருகின்றனர். 12,143 கோழிகளை தமிழ்நாடு கால்நடைத்துறை பராமரித்து வருகிறது. இதற்காக முதல்வர் ஜெயலலிதா ஒருகோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளார். இந்த கோழிகளில் ஒருநாள் பராமரிப்புச் செலவு இரண்டரை லட்சம் ரூபாய் என்கின்றனர் கால்நடைத்துறை அதிகாரிகள்.
சாலைகளில் கோழிகள்
தமிழக கால்நடைத்துறையினரிடம் கோழிகளை ஒப்படைக்காத சிலர் அவற்றை பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் கோழிகளை இறைச்சிக்கு விற்பனை செய்கின்றனர். அதன் இறைச்சியை, மக்கள் விரும்பி வாங்காததால் கடைக்காரர்களும் ஈமு கோழிகளை வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோழிகளை பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை தங்களின் இடங்களிலிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
இப்படி வெளியேற்றப்பட்ட கோழிகள் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே, எஸ்.வாழவந்தி ஏரிக்கரை பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்து வருகின்றனவாம். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஈமு கோழிகளுக்கு தீவனம் கொடுத்து பராமரிக்க முடியாமல் இங்கு கொண்டு வந்து விட்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஈமு கோழியின் முடி முதல் கால் விரல் வரை அனைத்தும் மருந்துக்கு பயன்படக்கூடியது. அவற்றை வளர்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற கூறப்பட்ட நிலையில் இன்றைக்கு தீவனம் கூட கிடைக்காமல் சாலைகளில் சுற்றித் திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சிகரமான உண்மை.












Click it and Unblock the Notifications