கரூர் அருகே தடுப்பணையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி
கரூர்: கரூர் அருகே செட்டிபாளையம் அமராவதி ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சின்ன ஆண்டான் கோவில் ரோடு எல்.ஆர்.ஜி. காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். பாலசுப்பிரமணி மற்றும் இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 40), மகள்கள் சுவாதி (16), காயத்ரி (15), உறவினர் மகன் கும்பகோணத்தைச் சேர்ந்த ராம்குமார் (12), கரூரைச் சேர்ந்த கவுசிகா ஆகிய 6 பேர் ஒரு காரில் கரூரை அடுத்த செட்டிபாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைக்கு புதன்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் குளிக்க சென்றனர்.
குளித்துக்கொண்டிருந்த போது சிறுவன் ராம்குமார் தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்க தொடங்கிய அவன், தன்னை காப்பாற்றும் படி சத்தம் போட்டான். இதைப் பார்த்த பாக்கியலட்சுமி தண்ணீரில் இறங்கி ராம்குமாரை காப்பாற்ற முயன்றார். ஆனால் பாக்கியலட்சுமியும் தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த அவருடைய மகள்கள் சுவாதி, காயத்ரி ஆகியோரும் தாயை காப்பாற்ற முயன்றனர்.
ஒருவர் பின் ஒருவராக மூழ்கினர்
ஆனால் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதில் மூச்சு திணறி பாக்கியலட்சுமி, அவரது மகள் காயத்ரி ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். ராம்குமார், சுவாதி ஆகிய இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராம்குமார், சுவாதி ஆகிய இரண்டு பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பாக்கியலட்சுமி மகள் காயத்ரி ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார், சுவாதி ஆகிய 2 பேரையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதில் பாலசுப்பிரமணியின் கண் முன்னே மனைவியும், குழந்தைகளும் நீரில் மூழ்கிய போதும் அவரால் காப்பாற்ற முடியாமல் போனதுதான் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் - 2 மகள்கள், உறவினர் மகன் ஆகிய 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications