ப.மோகன் அமைச்சராவது இது 3வது முறை.. உங்களுக்குத் தெரியுமா?

தமிழக அமைச்சரவையில் இருந்து சி.வி.சண்முகம் புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
அவருக்குப் பதிலாக தமிழக அரசின் தலைமை கொறடா ப.மோகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
3வது முறையாக அமைச்சர்...
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தாலுக்கா வடக்கனந்தல் கிராமத்தில் பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருபவர் ப.மோகன் (61). இவரது மனைவி மல்லிகா. மோகனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சி உறுப்பினராகி பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் மோகன்.
1976ம் ஆண்டு முதல் பல ஆண்டுகள் அதிமுக ஒன்றியச் செயலாளராகவும், 1985-ல் சின்னசேலம் ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
1996, 2006ம் ஆண்டுகளில் சின்னசேலத்தில் போட்டியிட்டு தோற்றார். 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார்.
2001ம் ஆண்டு சின்னசேலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக இருந்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் 2003ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இவர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், பின்னர் கூட்டுறவு மற்றும் வனத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
ஆனால், அதிமுக ஆட்சியில் பலர் அமைச்சராவதும் அந்த விவரம் மனதில் பதிவதற்குள் அவர் நீக்கப்படுவது 'ஜகஜம்'. இதனால் இவர் அமைச்சராக இருந்தது பொது மக்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும், அரசு தலைமைக் கொறடாவாகவும் உள்ளார் மோகன்.
மோகனின் பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறபட்டுள்ளது.
இதுவரை 12 அமைச்சர்கள் நீக்கம்:
கடந்த ஆண்டில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 12 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலங்களில், சட்டத் துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, சி.சண்முகவேலு, எஸ்.பி.சண்முகநாதன், புத்தி சந்திரன், எஸ்.பி.வேலுமணி, செந்தமிழன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பி.உதயகுமார், எம்.பரஞ்ஜோதி, செல்வி ராமஜெயம், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம் என அமைச்சர்களாக இருந்தவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் பல்வேறு கால கட்டங்களில் நீக்கப்பட்டுள்ளனர்.
7-வது முறையாக அமைச்சரவை மாற்றம்:
அதே போல தமிழக அமைச்சரவை தற்போது 7வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 16ம் தேதி இந்த அரசு பொறுப்பேற்றது. ஜுன் மாதம் 27ம் தேதி தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக, சென்ற ஜுலை மாதம் 17ம் தேதி 6-வது முறையாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications