கர்நாடகத்தில் போராட்டங்கள் தீவிரமடைகின்றன.. சென்னை ரயில் மறிப்பு
மாண்டியா: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை எதிர்த்து கர்நாடக ஹிதரக்ஷன சமிதி அமைப்பு விவசாயிகள் அமைப்பினர் அதன் தலைவர் மாதே கெளடா தலைமையில் தொடர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாதே கெளடா உண்ணாவிரதம் இருந்த நிலையில், இன்று முதல் அவரது அமைப்பினர் ஒவ்வொரு நாளும் ஒரு குழுவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
மைசூரில் இருந்து மண்டியா வரை காங்கிரஸ் கட்சியினர் பேரணி:
இந் நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மைசூரில் இருந்து மண்டியா வரை சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க் கட்சித் தலைவரான சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடந்தது. இதில் அந்தக் கட்டியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
மைசூர் அரண்மனை முன் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கியது. மைசூர் எல்லை வரை நடந்து சென்ற அவர்கள் பின்னர் அங்கிருந்து வாகனங்களில் மண்டியாவுவுக்கு வந்தனர்.
பேரணி தொடங்கும் முன் சித்தராமையா பேசுகையில், கர்நாடகத்தில் மழை இல்லாமல் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதை பற்றியும், மழை சரிவர இல்லாததால் அணைகள் நிரம்பாததை பற்றியும் சரியான தகவல்களை மாநில அரசு, மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் தெரிவிக்காததே இன்றைய குழப்பத்துக்கு காரணம்.
மேலும் காவிரி நீர் சம்பந்தமாக பிரதமர் அழைத்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சரியான பேச்சுவர்த்தை நடத்தாமல் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே வந்ததும் குழப்பத்துக்கு மற்றொரு காரணம் ஆகும் என்றார்.
சென்னை ரயில் மறித்த கெளடா கட்சியினர்:
அதே போல முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் மைசூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
மைசூர்-திருப்பதி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை சாமராஜ்புரம் ரயில் நிலையம் அருகே இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரயில்வே போலீசாரும், மைசூர் போலீசாரும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தண்டவாளத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பீதி நிலவியது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீரும், மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டே தாலுகாவில் உள்ள கபினி அணையில் இருந்து 4,000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications