காவிரி.. கர்நாடகத்தில் மத்திய குழு- அதிகாரிகளுடன் ஆலோசனை, இன்று அணைகளில் ஆய்வு

டெல்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் பிரதமர் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 9,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு காவிரை நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
இதை எதிர்த்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இநதையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் காவிரி அணைகளில் உள்ள நீர்மட்டம் மற்றும் மாநிலங்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி. சிங் தலைமயில் வந்த ஒரு குழு நேற்று சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியது. பின்னர் மேட்டூர் அணைக்குப் புறப்பட்டுச் சென்றது.
அதே போல இன்னொரு குழு மத்திய விவசாயத்துறையின் உதவி கமிஷனர் பி.பி.பாண்டே தலைமையில் கர்நாடகம் வந்தது.
நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜேக்கப், நீர்வளத்துறை துணை இயக்குனர் டாக்டர் பி.கே.ஷா, நீர்வளத்துறை இயக்குனர் டி.ரெங்காரெட்டி ஆகியோர் அடங்கிய இந்த மத்தியக் குழு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரெங்கநாத் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசியது.
தமிழகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் மத்திய குழுவின் அதிகாரியான டி.வி.சிங் இன்று பெங்களூர் வந்து இந்த குழுவினருடன் சேர்ந்து கொள்வார்.
கர்நாடகம் வந்துள்ள குழுவினர் இன்று கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சு நடத்துகிறார்கள். ஆய்வு பணியை முடித்துக் கொண்டு இன்று இரவு இந்த குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.
இந்தக் குழுவினர் டெல்லி சென்று அடுத்த 4 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications