முல்லைப் பெரியாறு- ஐவர் குழு அறிக்கையில் திருத்தம் கோரும் கேரள கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பலம் தொடர்பாக ஐவர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் வாதங்கள் நவம்பர் 5-ந் தேதி தொடங்க உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் பாதுகாப்பு தொடர்பான ஆராய அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் அறிக்கையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜெயின், லோதா , டட்டு, பிரசாத் மற்றும் டேவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, ஐவர் குழுவின் அறிக்கையில் சில தவறுகள் உள்ளன. இதனால் அதில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். தமிழக அரசின் தரப்பிலோ முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக வாதிடப்பட்டது.
இருத்ராப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
ஐவர் குழுவானது பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. இதில் திருத்தம் மேற்கொள்ள கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் அனுமதி கிடையாது. இப்படிச் செய்தால் இந்த வழக்கில் வாதத்தையே தொடங்க முடியாமல் தாமதமாகும். இருதரப்பும் தங்களது கருத்துகளை வாதங்களின் போது தெரிவிக்கலாம். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 5-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications