ஷீலா தீட்சித்தை பிரதமராக்க காங். அதிரடித் திட்டம்?

காங்கிரஸ் தரப்பில் தற்போது பெரும் குழப்பம் நிலவுகிறது. லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு வட இந்தியா முழுவதும் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. அவரது தாயார் சோனியா காந்தியோ, அரசுக்கு ஏற்பட்டு வரும் ஒவ்வொரு சிக்கலையும் தீர்ப்பதற்கு என்ன வழி என்ற பெரும் சிக்கலான நிலையில் இருக்கிறார். குஜராத்தில் வேறு தேர்தல் வருகிறது. அதையும் சமாளிக்க வேண்டும், நரேந்திர மோடிக்கு சரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
ஆனால் குஜராத்தில் பாஜக இன்னும் வலுவான நிலையில்தான் இருக்கிறது. இதை காங்கிரஸும் உணராமல் இல்லை. இதனால்தான் அரை மனதுடன் அங்கு மோடிக்கு பைட் கொடுத்து வருகிறது.
அதேசமயம் தற்போது டெல்லியில் ஒரு புதுத் தலைவலி கிளம்பியுள்ளது காங்கிரஸுக்கு. அதுதான் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் அரசியலுக்குள் புகுந்திருப்பது காங்கிரஸுக்கு உண்மையிலேயே பெரும் கவலையாக மாறியுள்ளது. டெல்லி நகர்ப்புற வாக்காளர்களை இவர் கவர்ந்து விடுவாரோ என்று காங்கிரஸ் அஞ்சுகிறது.
இதனால் நடுத்தர வர்க்க வாக்காளர்களை இழக்காமல் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அச்சம் காங்கிரஸுக்கு வந்துள்ளது. இதற்காகவே அவர்கள் ஷீலா தீட்சித்தை பிரதமர் பதவிக்குப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
முன்பு நடுத்தர வர்க்க மக்களைக் கவரும் வகையில்தான் மன்மோகன் சிங்கை களம் இறக்கினார் சோனியா. ஆனால் இப்போது பணக்கார வர்க்கத்தினர் கூட மன்மோகன் சிங்கை விரும்பவில்லை, அந்த அளவுக்கு மன்மோகனின் பெயர் கெட்டுப் போயிருக்கிறது.
இதனால்தான் ராகுல் காந்தியின் பெயரை ஆப்ஷன் ஏ என்று வைத்துக் கொண்டு, ஆப்ஷன் பி ஆக ஷீலா தீட்சித் பெயரை யோசித்து வைத்துள்ளதாம் காங்கிரஸ். ஷீலாவைக் கொணடு வருவதன் மூலம் நகர்ப்புற வாக்காளர்களையம், நடுத்தர வர்க்கத்தினரையும் ஒரே நேரத்தில் தக்க வைக்க முடியும் என்று நம்புகிறதாம் காங்கிரஸ்.
ஆனால் காமன்வெல்த் போட்டியில் ஏற்பட்ட பெரும் குழப்பம், ஊழல் புகார்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு நீந்திக் கொண்டிருக்கும் ஷீலா தீட்சித்தால் பிரதமர் பதவிக்கு வந்து என்ன சாதித்து விட முடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் தற்போது டெல்லியைச் சேர்ந்தவரான அரவிந்த் கேஜ்ரிவாலின் புதிய அரசியல் நடவடிக்கைகளால் கவலை அடைந்துள்ள காங்கிரஸுக்கு ஷீலாவை விட்டால் வேறு யாரையும் யோசிக்க் தோன்றவில்லை என்று கூறுகின்றனர்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் காங்கிரஸ் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை.
(கட்டுரையாளர் சசி சேகர், நிதி சென்ட்ரல்)












Click it and Unblock the Notifications