அக்.8ல் மீண்டும் அணு உலை முற்றுகைப் போராட்டம்: கூடங்குளத்தில் பதற்றம்

கூடங்குளம் அணுமின் இயங்கினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக இடிந்தகரை பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் கடல்வழியாக அணு உலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு தீவிரம்
இதற்கிடையே அணுமின்நிலையத்தின் முதலாவது அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட்டு மின்உற்பத்தி தொடங்குவதற்காக ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் வருகிற 8-ந்தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல்வழியாக படகுகளில் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அணு உலை எதிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கூடங்குளம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணுமின்நிலையத்திற்குள் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு அங்கு கூடுதலாக 200 மத்திய பாதுகாப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளம் தோண்டி மக்கள்
முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காக போலீசார் எந்தநேரமும் இடிந்தகரைக்குள் நுழையலாம் என்ற அச்சம் கிராம மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனிடையே சுனாமி காலனி பகுதியில் ரோட்டின்நடுவே 2 பெரிய குழிகளை போராட்டக்காரர்கள் தோண்டியிருக்கிறார்கள். இதனால் இடிந்தகரை கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
7000 போலீசார் வருகை
கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, தாமஸ் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முற்றுகை போராட்டத்திற்காக கூடுதலாக 6000 போலீசார் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றனர்.
கூடுதல் போலீசார் ஞாயிறன்று கூடங்குளம் வருகின்றனர். இவர்களை தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கடலோர காவல்படை போலீசார் நவீன ரோந்து படகுகளில் கூடங்குளம் வருகின்றனர். தென்மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் தலைமையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர். கடந்த முறை முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த முறை போராட்டத்தை முற்றிலும் ஒடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் இன்றிலிருந்தே பதற்றநிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications