தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?

பொய்த்த மழை
இந்தியா முழுவதும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு சரியான அளவில் பெய்யவில்லை. இதனால் அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை. கர்நாடகத்திலும் சரியான அளவில் மழைபெய்யாத காரணத்தினால் காவிரியில் போதுமான அளவு தண்ணீர் திறந்து விட முடியாது என்று அம்மாநில அரசு கைவிரித்து விட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் வடகிழக்கு பருவமழையைத்தான் நம்பியிருக்கின்றனர்.
ஏனெனில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் குறைந்த மழைதான் கிடைக்கும்.வடகிழக்கு பருவ மழைக் காலத்தில்தான் அதிக மழை பொழியும். தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் எப்போது வடகிழக்கு பருவமழை பெய்யும். விவசாய வேலைகளை தொடங்கலாம் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். வடகிழக்குப் பருவமழை தொடங்குவது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது :
அக்டோபர் 20ல் பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை 24 சதவிகிதம் குறைவாகவே கிடைத்துள்ளது. அக்டோபர் 20ம் தேதியையொட்டி வடகிழக்கு பருவமழை தொடங்கும். 20ம் தேதிக்கு சற்று முன்னதாகவும் தொடங்கலாம் சற்று பின்னாலும் தொடங்கலாம். எப்படியானாலும் பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருகிறது. கோவை, நெல்லை மாவட்டங்களில் கோடைகாலத்தைப் போல வெயில் அடிக்கிறது. எனினும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு மேகங்கள் திரளும் என்று கூறினார்.
சரியான நேரத்தில் தொடங்குமா?
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களில் பொய்த்துவிட்டது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மத்திய பகுதிகளில் அதாவது திருச்சி, நாகை, கடலூர், விழுப்புரம் முதலிய மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சற்று திருப்தி அடைந்தனர்.
வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி அணைகளில் நீர் நிரம்பினால் மட்டுமே காவிரி நீரை எதிர்பார்க்காமல் விவசாயப் பணிகள் குறைவிலாது நடைபெறும். எனவேதான் விவசாயிகள் ஆவலுடன் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications