சோனியா மருமகனின் பெரும் ஊழல் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது - பாஜக
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் பெரும் ஊழலின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று ரூ.65 கோடி வட்டியில்லாக் கடன் வழங்கியதாகவும், ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.5 கோடிக்கு ஒதுக்கீடு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது வெளிவந்துள்ளது கடுகளவுதான். இதன்பின்பு பல மடங்கு பெரிய விஷயங்கள் வெளிவர இருக்கிறது.
விவசாயிகள் வட்டியில்லா கடனுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும்போது, காங்கிரஸ்காரர்களுக்கு வட்டியில்லாமல் பணம் கொடுக்க எங்கிருந்து ஆட்கள் வருகிறார்களோ? என்று தெரியவில்லை.
ஊழலை மறுத்தாலும், இந்த பிரச்சினையில் காங்கிரஸ் எடுத்து வைக்கும் நடவடிக்கைகளை பார்க்கும்போதே, இந்த ஊழல் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது தெரிகிறது.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது கடும் கண்டனத்துக்குரியது. இதனால் சாதாரண வியாபாரிகள், சிறு தொழில்கள் கடும் பாதிக்கப்படும். இதை கண்டித்து பாஜக சார்பில் வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை ஒரு மாதம் தமிழகம் முழுவதும் கண்டன பிரசார பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு அங்குள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதையும் மீறி அந்த அரசு நிமிடத்துக்கு 9 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது.
இந்த பிரச்சினையில், தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டவும், சுமூக தீர்வு காணவும் உடனடியாக அனைத்து கட்சி கூட்டதை கூட்டவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications