சென்னையில் ரகசிய கூட்டம் நடத்திய 13 பேர் கைது.. நக்சலைட்டுகள்?
சென்னை: சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியதாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் கூடியிருந்த 13 பேரை நக்சலைட்டுகள் என்று கூறி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் நக்சலைட் அமைப்பில் இருந்தவர் என்பதால் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க திட்டமிட்டதாகவும் அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்டோரில் துரைசிங்வேல், பாஸ்கரன், பழனிமாணிக்கம் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குள்ளானவர்கள். 2002-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை நடத்திய வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தவர்கள். தற்போது ஜாமீனில் இருக்கின்றனர்.
ஆனால் தாங்கள் நக்சலைட் அமைப்பிலிருந்து விலகி அரசியல் கட்சியைத் தொடங்க திட்டமிட்டிருந்ததாக துரைசிங்கம் வேலு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாங்கள் ஜனநாயக ரீதியாக மக்கள் ஜனநாயக குடியுரிமை கட்சியை நடத்தி வருகிறோம். நாங்கள் கூட்டம் நடத்திய பள்ளியில் எனது குழந்தை படிக்கிறது. இதனால் பள்ளியின் முதல்வர் எனக்கு தெரியும். அவரது அனுமதியோடுதான் இந்த கூட்டத்தை நடத்தினோம். நாங்கள் மக்கள் விரோத, அரசுக்கு எதிரான செயல் எதிலும் ஈடுபடவில்லை. மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தோம் என்றார் அவர்.
அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications