நாம கறி சாப்பிட ஆரம்பிச்சு 15 லட்சம் வருஷமாச்சாம்!

வடக்கு தான்சானியாவில் உள்ல ஒல்டுவாய் என்ற பிரதேசத்தில் நடந்த ஆய்வில்தான் இந்த சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பகுதிக்கு மனிதகுலத்தின் தொட்டில் என்று ஒரு செல்லப் பெயர் உண்டு. காரணம், இப்பகுதியில்தான் மனித குலம் குறித்த பல முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்து வருகின்றன. எனவே இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.
தற்போது 2 இன்ச் அளவிலான ஒரு மனிதனின் மண்டை ஓட்டுத் துண்டை ஆய்வாளர்கள் இப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுரித்து ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான அமெரிக்காவின் சார்லஸ் முசிபா கூறுகையில், மனிதர்கள் மாமிசம் சாப்பிடுவது என்பது எப்போது முதல் தொடங்கியது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. மனிதர்கள் தோன்றிய நாள் முதலே மாமிசம் சாப்பிட ஆரம்பித்திருக்கலாம் என்றுதான் இத்தனை காலம் நாம் நினைத்து வந்தோம். ஆனால் தற்போது ஆய்வு முடிவைப் பார்க்கும்போது 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் மாமிசம் சாப்பிட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.
தற்போது கிடைத்துள்ளது ஒரு குழந்தையின் மண்டை ஓட்டுப் பகுதியாகும். 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வேட்டையாடி இறைச்சியை சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
மாமிசம் சாப்பிட்டு வருபவர்கள் திடீரென அதை நிறுத்தி விட்டால் நமது உடலில் போரோடிக் ஹைபரோஸ்டாசிஸ் என்ற சத்துப் பற்றாக்குறைப் பிரச்சினை வரும். அந்தப் பிரச்சினை இந்த குழந்தையிடம் இருந்தது அதன் மண்டை ஓட்டை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. எனவே இறைச்சி கிடைக்காமல் சாதாரண சாப்பாட்டை சாப்பிட்டு வந்ததால் இந்தப் பிரச்சினை வந்து இக்குழந்தை இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
மேலும் நமது மூதாதையர்கள், சத்துக்காக இறைச்சியை சாப்பிட்டு வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இறைச்சியின் தன்மையை அவர்கள் அப்போதே உணர்ந்துள்ளனர் என்பதும் புரிகிறது.
உண்மையிலேயே ஆச்சரியமான தகவல்தான்.!












Click it and Unblock the Notifications