பிரியங்காவின் "இமாச்சல் சொத்து": பாஜகவின் அஸ்திரத்தை அவர்கள் மீதே திருப்பி அடித்த ஜெகரிவால்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா, இமாச்சலப் பிரதேசத்தில் வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ராவுக்கும் டிஎல்எப் நிறுவனத்துக்கும் இடையேயான பரிவர்த்தனை விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிற நிலையில் தற்போது பிரியங்கா மீதும் சொத்துக் குவிப்பு புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது:
இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது பிரியங்கா காந்திக்கு சர்ச்சைக்குரிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். வத்ரா மீதான ஊழல் புகாரில் விசாரணை இருக்காது என்று மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். இந்த ஆட்சியில் நிறைய அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை என்றார் அவர்.
கெஜ்ரிவாலை தூண்டிவிட்ட பாஜக
இமாச்சலப் பிரதேசத்தில் சோனியா மகள் பிரியங்காவுக்கு சொத்து இருப்பதாக பாஜகவின் இமாச்சல் முன்னாள் முதல்வர் சாந்த குமார்தான் முதலில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அதாவது பிரியங்கா காந்தி இமாச்சலப் பிரதேசத்தில் சொத்து வாங்கிக் குவித்துள்ளார்.அதையும் வத்ரா மீதான புகார் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். இருப்பினும் பிரியங்காவிவின் சொத்து விவரங்கள் குறித்து எங்களிடம் போதுமான தகவல்கள் இல்லை என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.
கெஜ்ரிவால் காட்டம்
இந்தக் கடிதம் குறித்து கெஜ்ரிவாலின் ஊழலுக்கு எதிரான இயக்கம் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரியங்காவின் சொத்து குறித்து சாந்த குமார் தங்களிடம் தகவல் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக முதல்வர் துமாலும் சாந்தகுமாரும்தான் பிரியங்காவின் சொத்து விவரம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தவரையில் வெளி மாநிலத்தவர் அங்கு சொத்து வாங்க முடியாது. இது உண்மையாக இருக்குமேயானால் பிரியங்கா சொத்து வாங்க எந்த அரசாங்கம் அனுமதி கொடுத்தது? என்பதை இமாச்சல அரசுதான் வெளிப்படுத்த வேண்டும். மற்ற கட்சிகளைப் போல் பாரதிய ஜனதா கட்சிக்கும் மக்கள் சொத்தை கொள்ளையடிப்பதில் தொடர்பு இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஊழல் விவகாரம் வெடித்திருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டுறது என்பதைப் போல பிரியங்கா மீது புகார் சொல்லப் போய் கெஜ்ரிவால் கோஷ்டி பாஜக மீதே புகார் அஸ்திரத்தை திருப்பி அடித்திருக்கிறது!












Click it and Unblock the Notifications