மாயாவதி 'பல்டி'.. மத்திய அரசின் 'பியூஸை' பிடுங்குவது குறித்து பின்னர் முடிவாம்!
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பின்னர் அறிவிப்பேன் என்று கூறிவிட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.
முன்னதாக இன்றே இது குறித்து அறிவிக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், பின்னணியில் என்ன நடந்ததோ தெரியவில்லை தனது முடிவை ஒத்தி வைப்பதாகக் கூறிவிட்டார்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்து, கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சமீபத்தில் வெளியேறிவிட்டது. இதனால் 19 எம்பிக்களை இழந்து மத்திய அரசு மைனாரிட்டி அரசாகிவிட்டது.
ஆனால், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந் நிலையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முலாயமும் மாயாவதியும் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மம்தாவோ அல்லது பாஜகவோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், முலாயமும் மாயாவதியும் அதை ஆதரித்துவிட்டால், மன்மோகன் சிங் அரசு வீட்டுக்குப் போக வேண்டியது தான்.
ஆனால், மம்தா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டார், கொண்டு வந்தாலும் அதை முலாயமும் மாயாவதியும் ஆதரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் ஏதாவது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த வண்ணம் உள்ளது.
இந் நிலையில் நேற்று லக்னொவில் தனது கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி,
மத்திய அரசுக்கு ஆதரவைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து புதன்கிழமை (இன்று) நடக்கும் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேலும் இப்போதுள்ள நிலையில் மத்தியில் விரைவிலேயே தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து மாயாவதியை சமாதானப்படுத்தும் வேலைகளை நேற்றே மத்திய அரசு ஆரம்பித்துவிட்டது. அவருடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். அவர் மீது சில வழக்குகளும் உள்ளன, அவற்றை சிபிஐ விசாரித்தும் வருகிறது.
இந் நிலையில் முடிவை ஒத்தி வைப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications