முல்லைப் பெரியார் அணை பராமரிப்பு பணி: சுப்ரீம் கோர்ட் குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையின் உறுதி தன்மை குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் பல்வேறு நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினர் புதிய தொழில் நுட்ப உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 8 வல்லுனர்கள் நடத்திய சோதனை முடிவுகளை 13 ஆய்வறிக்கைகளாக உச்ச நீதிமன்றத்தில் வழங்கினர்.
ஆய்வறிக்கை அடிப்படையில் அணை பலமாக உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை நகலை 2 மாநில அரசுகளுக்கும் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் அணை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்வதற்கு கேரள அரசு இடையூறாக இருப்பதாக தெரிவித்தனர்.
மேற்பார்வையாளர்கள் நியமனம்:
இதையடுத்து, பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை, தமிழக பொதுப்பணித்துறை செய்ய, எவ்வித தடையும் இல்லை என்றும், பராமரிப்பு பணிகளை, மத்திய நீர்வளக் கமிஷனைச் சேர்ந்த ஒருவர், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒருவர் ஆகியோரின் மேற்பார்வையில் நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், மத்திய நீர்வளக் கமிஷன் சார்பில் அணைப்பாதுகாப்பு இயக்குனர் தனேஜா, தமிழக அரசு சார்பில், கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்தரம் ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின், கேரள அரசு சார்பில் மேற்பார்வையாளராக, திருச்சூர் கண்காணிப்பு பொறியாளர் ஜார்ஜ் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
பராமரிப்பு பணி:
இவர்கள் முன்னிலையில் பேபி அணை, பிரதான அணை, 13 ஷட்டர் பகுதிகளில் மராமத்து பணிகளும், ஷட்டர் பகுதியில் படிந்து உள்ள மண் மேட்டை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. பராமரிப்பு பணிகளில் கடந்த 10 நாட்களாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் முத்தரப்பு சிறப்பு குழுவை சேர்ந்த எல்.கே. தனேஜா தலைமையில் மோகனசுந்தரம், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் முல்லை பெரியாறு அணைக்கு வந்திருந்தனர். அணையின் முக்கிய பகுதிகளான பிரதான அணை, பேபி அணை, கேலரி, மதகு பகுதிகளை பார்வையிட்டனர்.
இதனையடுத்து பேபி அணையின் மேல் பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் இனி நடைபெற உள்ள பணிகள் குறித்தும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
ஆய்வுக்கு பின் எல்கே. தனேஜா கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குறித்து மேற்பார்வையிட அமைக்கப்பட்ட சிறப்புகுழுவின் சார்பில் முதல் முறையாக அணைக்கு வந்து உள்ளோம். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பெரியாறு அணை பராமரிப்பு பணி மேற்கொள்ள வழங்கிய அறிவுறுத்தலின்படி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிக்காக 5 நாட்கள் அணையில் தங்கி மேற்பார்வையிட உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications