சட்டசபை வைர விழா நினைவு வளைவு... சென்னையில் அமைகிறது
சென்னை: சட்டசபை வைர விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமான நினைவு வளைவை நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952 ஆம் ஆண்டு அமைக்கப் பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2012 ஆம் ஆண்டு 60 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதையடுத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழா வெகு விமரிசையாக விரைவில் நடைபெறவுள்ளது.
இதன் தொடக்கமாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நிகழ்ச்சியினை என்றென்றும் மக்கள் நினைவில் கொள்ளும் வகையில், சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா நினைவு வளைவினை அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.
சரித்திரப் புகழ் மற்றும் பாரம்பரியம் வாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டையின் பொலிவிற்கு பொருந்துமாறு கம்பீரமான தோற்றத்துடன் இந்த வளைவு வடிவமைக்கப்படும்.
புதிதாக கட்டப்படவிருக்கும் இந்த நினைவு வளைவு, 80 அடி அகலமும், 41 அடி உயரமும் கொண்டதாக இருப்பதுடன், பெருமை வாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு பொருத்தமாகவும், பாரம்பரியம் மற்றும் நவீன கட்டடக்கலை நுட்பத்திறனை உள்ளடக்கியும் கட்டப்படும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications