நெல்லையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட பல் டாக்டர்
நெல்லை: நெல்லையில் உள்ள லாட்ஜில் கடிதம் எழுதி வைத்து விட்டு பல் டாக்டர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜா நகரை அடுத்த ஜே.ஜே. நகரை சேர்நதவர் டாக்டர் கலீலுல்லா. இவரது மகன் ஆசிக். பல் டாக்டர். இவருக்கு மனைவி சபீனா மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிக் பல் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக யாரிடமும் சரியாக பேசாமல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10ம் தேதி இரவு நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் ஆசிக் ஏசி அறை எடுத்து தங்கினார். இரு நாட்களாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து எஸ்பி லோகநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து டாக்டர் ஆசிக் தங்கியிருந்த அறையின் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையின் படுக்கையில் ஆசிக் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அறையில் போலீசார் சோதனையிட்ட போது, ஆசிக் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில், சபீனா ஐ லவ் யூ, வாப்பா, உம்மா, சபீனாவையும் குழந்தையையும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள். நான் ஒரு மன நோயாளி. எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று எழுதப்பட்டு இருந்தது. விசாரணையில் டாக்டர் ஆசிக் கழுத்தில் மரத்து போகும் ஊசி போட்டு கொண்டு, தன்னை தானே கத்தியால் கழுத்தை அறுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.