விடிஞ்சிருச்சா... சொல்லவே இல்லை... போலீஸாரை டென்ஷனாக்கிய திருடன்!
வேலூர்: டீக்கடையில் திருடப் போன இடத்தில் அயர்ந்து தூங்கி விட்டான் ஒரு திருடன். காலையில் போலீஸார் அவனைத் தட்டி எழுப்பியபோது, அதுக்குள்ள விடிஞ்சுருச்சா என்று கேட்டபடி எழுந்தான் அந்தத் திருடன்.
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் விவேக்பாபு. இவர் புதிய பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார் பாபு. இந்த நிலையில் நள்ளிரவில் 2 திருடர்கள் அங்கு வந்துள்ளனர். ஒருவன் கடைக்கு அருகில் இருந்த துவாரம் வழியாக உடலை சுருக்கி, குறுக்கி உள்ளே போய் விட்டான். 2வது நபர் வெளியே காவலுக்கு இருந்தான்.
இந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த சிலர் ஏம்ப்பா இங்கே நிற்கிறே என்று வெளியில் இருந்த திருடனைக்கேட்டுள்ளனர். அதைப் பார்த்து பயந்து போன திருடன், ஏதோ சொல்லிச் சமாளித்து விட்டு அங்கிருந்து மெதுவாக ஓடி விட்டான்.
கூட வந்த சகா தப்பி ஓடியதைப் பார்த்து டீக்கடைக்குள் புகுந்திருந்த திருடனுக்கு பயம் அதிகமாகியது. மேலும் அவனால் தனியாகவும் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து உள்ளேயே இருந்தான். சிறிது நேரத்தில் அவனுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. அப்படியே கண்ணயர்ந்து விட்டான். நன்றாக தூங்கி விட்டான்.
காலை 5 மணிக்கு கடைக்கு வந்த விவேக் பாபு கடையைத் திறந்தபோது யாரோ ஒரு நபர் கடைக்குள் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவனது அருகில் தனது கடையில் இருந்த பல பொருட்களை மூட்டையாக கட்டி அந்த நபர் அருகில் வைத்திருந்ததையும் பார்த்தார். சரிதான், இவன் திருடன் என்ற முடிவுக்கு வந்த அவர், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து அந்தத் திருடனை தட்டி எழுப்பினர். நல்ல தூக்கத்தில் யாரப்பா கெடுப்பது என்று குழம்பியபடி எழுந்த திருடன், தன்னைச் சுற்றி நின்ற போலீஸாரைப் பார்த்து விடிஞ்சுருச்சா என்று கேட்டுள்ளான். காலங்கார்த்தாலே தங்களை எழுப்பி திருடனைப் பிடிக்கச் சொன்னதற்கே ஏக டென்ஷனாக இருந்த போலீஸார், திருடன் தங்களைப் பார்த்து விடிஞ்சிருச்சா என்று கேட்டதும் மேலும் டென்ஷனாகி இங்க என்னடா பண்ணுற என்றுகேட்டு எழுப்பினர். அதைக் கேட்ட திருடன் சுதாரித்து, தனக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கடை அருகே உள்ள துவாரம் வழியே உள்ளே புகுந்து படுத்துத் தூங்கியதாகவும் கூறி சமாளித்துப் பார்த்தான்.
ஆனாலும் விடாமல் போலீஸார் விசாரிக்கவே உண்மையைக் கக்கினான். இந்தத் திருடனின் பெயர் சுரேஷ். வயது 27 ஆகிறது. சல்லீவன்பேட்டையைச் சேர்ந்தவன். கூட வந்த திருடனின் பெயர் ஆனந்தன். அவனும் அதே பகுதிதானாம்.
சிக்கிய சுரேஷை காவல் நிலையத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications