இடிந்தகரை செல்ல முயன்ற 11 பேர் கைது- நக்சல் ஆதரவாளர்கள் என்று 'பகீர்' தகவல்

கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரை பகுதி மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த மாதம் 10ம் தேதி நடந்த அணுஉலை முற்றுகை போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கும்பலை கலைத்தனர். இதில் இருத்தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் நக்சல் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சேலம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில அமைப்பை சேர்ந்தவர்களும், இடிந்தகரை சென்று போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உவரி மற்றும் கடற்கரை கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் இடிந்தகரை செல்கிறார்களா என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஜெயாபிரின்ஸ் மற்றும் போலீசார் டோல்கேட் பகுதியை கடந்து வந்த ஒரு பஸ்சில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் உண்மை கண்டறியும் என்ற பெயரில் இடிந்தகரைக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 பேர் செல்வது தெரியவந்தது. இவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து நெல்லை சரக டிஐஜி சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதாரி, கியூ பிரிவு துணை சூப்பிரண்டு சந்திரபால் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது அவர்களில் சிலர் நக்சல் ஆதரவு தீவிரவாதிகள் என்ற திடுக் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த குழுவில் இருந்த 11 பேரையும் கைது செய்தனர். அவர்களில் 7 ஆண்களை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், 4 பெண்களை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் கிளை சிறையிலும் அடைத்தனர்.
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பெயர் விபரம் வருமாறு,
1. கேசவன்(35) மதுரை
2. அகராதி(25) மதுரை
3. ஜெகன்(24) அண்ணாநகர், மதுரை
4. பழனிசாமி(48) கரூர்
5. கமின்(43) அயோத்தியா நகர், ஆந்திரா
6. தங்தகீர்(24) கடப்பா, ஆந்திரா
7. அரவிந்த் கே.ஆர்.ஆலினாஸ்(50) ஜார்க்கண்ட்
8. தாமோரார்(33) ஜார்க்காண்ட்
9. வரலட்சுமி(30) ஆந்திரா
10. பிரதிமாதாஸ்(30) கோடவாஸ், ஓரிசா
11. பிரியா, கிழக்கு கைலாஸ், டெல்லி
இதில் கேசவனும், அகராதியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களும் மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவரும் மக்கள் உரிமை புரட்சி குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பழனிசாமி ஏகாதிபத்திய இயக்கத்தின் மாநில செயலாளராக உள்ளார். டெல்லி சேர்ந்த பிரியா ஜவஹர்லால் பல்கலை கழக மாணவி. மேலும் நக்சல் ஆதரவு இயக்கத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications