டெங்குவிலிருந்து தப்ப முழுக்கை சட்டை போடுங்க: ஒரு அமைச்சரின் அட்வைஸ்
சென்னை: டெங்கு காய்ச்சலை பரப்பக் கூடிய கொசுக்களை ஒழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமோ, டெங்குவிலிருந்து தப்பிக்க இதுதான் வழி என்று மாணவர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. போதிய விழிப்புணர்வு, வழிமுறைகள் மூலம் இக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தலாம். மாணவர்கள் முழுக் கை சட்டை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழலைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களில் சுகாதாரம் பேணுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகளைத் தெளிக்க வேண்டும் என்றார் அவர்
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் விகிதம் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
தென் மாநிலங்களில் கடந்த ஆண்டில் 2,859 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு (12,500 பேர்) உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை டெங்கு காய்ச்சலால் 33 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 77 பேர் வரை இறந்துள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications